போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழைய வாக்கு.யாரு சார் இப்ப போதும்னெல்லாம் நினைக்கிறாங்க? அத்தனைக்கும் ஆசைப்படு,பெரிதினும் பெரிது கேள்,திங்க் பிக் இப்படித்தானே எல்லோரும் சொல்லிட்டிருக்காங்க.
கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடங்கி நிறைய பெரிதினும் பெரிதுகள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.
மிஷ்கின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பர்த்ததாகவும் நந்தலாலா படத்தின் இசையை 10000 முறை கேட்டதாகவும்,50000 புத்தகங்களை வாசித்ததாகவும்,பீத்தோவனின் சிம்பொனி இசையை 1000 முறை கேட்டதாகவும் சொல்கிறார்.இது பெரிதினும் பெரிதினும் பெரிது என்றுதான் தோன்றுகிறது.
தமிழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு காணொளியில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு 17 ஆயிரம் அத்தைகள் இருந்ததாகவும்,ராஜு முருகனுக்கு 106 சித்திகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ஆலம் விழுதுகள் போல்உறவு 'ஆயிரம்' வந்தும் என்ன' என்று கண்ணதாசன் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் பாடியிருக்கிறார். அதனுடைய நீட்சியாகத்தான் இது என்று ஐயமுற வேண்டியிருக்கிறது.
வட சென்னை பாணியில் சொன்னால் நா.மு,ரா மு,மிஷ்கின் இவங்களையெல்லாம் இணைப்பது இவங்க எல்லோருக்கும் நண்பரா இருக்கிற பவா செல்லத்துரை என்றால் அது மிகையன்று.ஆனால் அவரை மிஞ்சும் 'கதை' சொல்லி ஒருவர் இருக்கிறார்.இந்த நம்பர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அவர்தான் மதுவதந்தி.
அவர் உஜ்வாலா' திட்டத்தின் கீழ் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடி ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி செலுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார். இதைப் பெரிதினும் பெரிது கேட்பதன் உச்சமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி தான். உலகம் முழுக்க மக்கள் தொகையை கூட்டினால் கூட 8,000 கோடி வராது. மதுவந்தி சொல்வது போல் 8000 கோடி பேருக்கு 5000 கோடி என்றால் ஒரு ஆளுக்கு 62 பைசாதான் வரும், முழுதாய் ஒரு ரூபாய் கூட வராது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிதினும் பெரிதினும் கேட்பது என்பது ஒரு கனவாய் இருக்கலாம் அல்லது நனவாக விரும்பும் கனவின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பெரிதாய்ச் சிந்தியுங்கள்..கனவு காணுங்கள்,இன்றோ,நாளையோ அல்லது என்றோ ஒரு மழை பெய்யும் மதியப்பொழுதிலோ அல்லது சுட்டெரிக்கும் சுடுவெயில் நாளிலோ என்றோ ஒரு நாள் சர்வ நிச்சயமாய் அது நனவாகும். அப்படி இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகப்போவதில்லை இன்னும் பெரிதாய் அடுத்த கனவைக் காண்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக