கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும்கிளி கையில்வைத்து என்று மதுரை மீனாட்சியை வர்ணித்து பாடும் பக்திப் பாடலை அனைவரும் அறிந்திருக்கிறோம்.பெண்ணிற்கு அழகு சேர்ப்பதில் கொண்டைக்கு உண்டு பெரும்பங்கு.தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியான இரண்டு வகை கொண்டைகளை உடைய பெண்ணைப் பற்றிய பாடல்களைத்தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.
மதயானைக் கூட்டம் படத்தில் இடம்பெற்ற கோண கொண்டைக்காரி பாடலும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலும்தான் அவை.
கோண கொண்டைக்காரி என்பது ஒரு சாய்ந்த நிலையிலிருக்கும் கொண்டையைக் கொண்ட பெண்ணே என்ற பொருளில் துவங்குகிறது இந்தப் பாடல். ஆனால் இந்த கோண கொண்டைக்காரியின் குணநலன்கள் சொல்லும்படியாக இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம் தான்.கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே..என்று துவங்குகிறது இந்த பாடலின் இரண்டாவது வரியில் கண்ணால் குத்திவிட்டு மூன்றாவது வரியில் கொன்று விடுகிறாள் இந்த கோண கொண்டைக்காரி. அதாகப்பட்டது கொல்லல் தரும் துன்பத்தைத் தலைவனுக்குக் கொடுக்கிறாள்.அடுத்தடுத்த வரிகளைப்பார்த்தால் கோண கொண்டைக்காரி வன்முறையின் மொத்த உருவமாய் இருக்கிறாள் என்பது புலனாகும்.
'தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா' இவ்வரிகளில் திரித்தல்,கிறங்க ஆடித்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு உள்ளுக்குள் ஒளிந்துகொண்டும் உயிரை அறுக்கும் வேலையச் செய்கிறாள்.
நம்ப வைத்து கழுத்தறுத்தல் என்று ஒரு சொற்றொடரைக் கேட்டிருக்கிறோம்.இதுவும் சற்றேறக்குறைய அதே முறைதானோ என எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறாக அவளுடைய குண நலன்கள் அறிந்த தலைவன் போரால சாவில்லை மாரால்தான் சாவு என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.
'இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல
பெத்து கொடுக்கணும்'
என்பதன் மூலம் இந்த இணை வன்முறை கலாச்சாரத்தை வளர்க்க அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே படுகிறது.இவர்களின் சந்ததிகளுக்கும் இந்த வன்முறையைப் புகட்டிவிடுவார்களோ எனும் எண்ணம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.
அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலில் கொல்லுதல்,குத்துதல்,உயிரை அறுத்தல், அருவா போன்ற வன்முறையை விதைக்கும் சொல்லாடலும் இல்லை. அச்சுவெல்லம்,இஞ்சிமரப்பா,மா,பலா,வாழை,கற்கண்டு,பிசுரு மிட்டாய்,பால் என இனிமை நிறைந்த சொற்களே ஆங்காங்கு தென்படுகின்றன.தலைவன் தலைவி இருவருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடுதான் அதிகமாய் இருக்கிறது.
இஞ்சி மரப்பா இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ
ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ
எனும் வரிகளில் வன்முறை இருப்பதுபோல் தெரியலாம்.ஆனால் கசங்கிப் போனேன்டீ என்று தலைவன் சொல்லுகிறான்,ஆகையால் இது தலைவியின் தவறு இல்லை.தானாக முன்வந்து கசங்கிப் போவதாகத்தான் இதனைப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.ஈர உதட்டில் சூடுபரப்பி இஸ்திரி போடுவதையும் இவ்வகையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா என்பதன் மூலம் பல் படாத மென்மை இதில் வெளிப்படுகிறது.கவ்வுவதில் வன்முறைக்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யாதது உண்மையில் பாராட்டத்தக்கதே
அன்பை விதைக்கும் அண்டங்காக்கா கொண்டைக்காரி,ஆயுத கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கோண கொண்டைக்காரியைவிட ஒரு படி மேலே நிற்கிறாள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.வெறும் அண்டங்காக்கா கொண்டைக்காரி என்று சொல்லிவிட முடியாமல் அன்பின் மூலம் இந்த அகிலத்தை அண்டத்தைக் காக்க வந்த அண்டங்காக்கை என்று இம்சை அரசன் 23ம் புலிகேசியில் சொல்வதுபோல் கூறுவதுதான் பொருத்தமாய் இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக