2016 இருந்தே நடைமுறையில் இருக்கிறது என்றாலும் ஃபேஸ்ஆப் செயலி தற்போது மிகப் பிரபலமாய் ஆகியிருக்கிறது.விழித்திருப்பது ம்,விலகியிருப்பதும்,வீட்டிலிரு ப்பதும் சிலநேரம் வெட்டியாய் இருப்பதும் இந்தச்செயலியைப் பிரபலப்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையன்று.
நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து இளமையாக, முதுமையாக, பெண்ணாக,ஆணாக உருமாறினால் எப்படி இருப்போம் என்பதன் டிஜிட்டல் கற்பனைதான் இது. அதிலும் ஆணாக இருந்துகொண்டு பெண்ணாக மாறும் கற்பனை, பெரும்பாலானவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. பெண்குழந்தை இல்லாவிட்டால் ஆண்குழந்தைக்கு அரிதாரம் பூசி,பெண்குழந்தைபோல தோன்றச்செய்து மகிழும் ஆதிகால வழக்கத்தின் ஆண்ட்ராய்டு தொடர்ச்சியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.
ஆண்கள் தங்களை பெண்ணாக கற்பனை செய்வது புதிதல்ல.தன்னை பெண்ணாகப் பாவித்து மாணிக்கவாசகர் மாம்ஸ் கூட சிவன்மீதுள்ள பிரியத்தை திருவெம்பாவையாக பாடியிருக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்!பெண்ணின் பெயரைப் புனைப் பெயராகக் கொண்ட பிரபலமான ஆண் எழுத்தாளர்களான சுஜாதா உள்ளிட்ட பலரை நாம் அறிவோம்.அப்படி ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஆன்லைன் அர்த்தநாரிகள்,அவ்வை சண்முகிக்கள்,மெய்நிகர் மாதொருபாகன்கள் இணையம் முழுதும் விரவிக்கிடக்கின்றனர். பழனிச்சாமிகள் திருமதி பழனிச்சாமிகளாக பரவிக்கிடக்கின்றனர்.
மும்பைக்குப் போய் ஆப்பரேஷன் செய்து பாலினம் மாறிய கதைகளை நாம் கேள்விப்பட்டதுண்டு. இப்பொழுது மும்பை ஆபரேஷன் தேவையில்லை மொபைல் அப்ளிகேஷன் போதும் என்ற அளவில் காலம் நம்மை நிறுத்தி இருக்கிறது.இந்த செயலியைத் திறந்து,மொபைலில் இருக்கும் புகைப்படத்தைத் தேர்வு செய்து,கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னிப்பெண்ணாய் மாற்றும் ஒரு நமக்குநாமே திட்டம்தான் இந்தச்செயலி.
மாஸ்க் முகங்களைப் பார்த்துச் சலித்த வேளையில் மாஸாக நாமே மாறுவது பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.எந்தச்சோப்பும்,சிவப்பழகுக் க்ரீமும் தராத சிவப்பழகை ஆண்களுக்குக்கூட அள்ளி வழங்குகிறது இந்த ஆப்.பெண்ணாய்ப் பிறந்திருந்தால் இவ்வளவு அழகாய் இருந்திருப்போமா என்று வியக்கும் அளவிற்கு அழகாக்கிவிடுகிறது இந்த ஆப். நம்மை நாமே நேசிக்கும் அபாயம் நேரவும் வாய்ப்பிருக்கிறது. நமக்கு நாமே பெண்ணாய் மாறி ரசித்துக்கொள்வது,முதிர்கண்ணன்களாக இருக்கும் முரட்டுத்தனியர்களுக்கு (மொரட்டுசிங்கிள்) 'வேற வழி தெரியல ஆத்தா' என தற்காலிக ஆறுதல் தரவல்லதாகவும் இருக்கிறது.எல்லா முகங்களும் நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அவனா நீ என்று அதிர்ச்சியடையவும்,வேலூர்,வீலூர் ஆவதுபோன்ற விபரீத விளைவுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
முதியவர்களாய், இளைஞர்களாய்,ஆணாய்,பெண்ணாய்,அரிதாரம் பூசியவராய் எனப் பல்வேறு பரிமானங்களுக்குப் பயணப்படும் கலர்ஃபுல் கால எந்திரமாய் அமைந்துள்ளது இந்த ஃபேஸ் ஆப் செயலி.சிரிப்பு உருவாக்கல்,சிகை நீளமாக்கல்,மூக்கு பெரிதாக்கல்,முதிர்ச்சி உருவாக்கல்,பின்புலப்படமாற்றல் என எண்ணற்ற மெருகேற்றல்கள் இதன்மூலம் எளிதாய்ச் செய்ய இயலும்.அரசாங்க முடிவுகளைப்போல அடிக்கடி எளிதாய் மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த தோற்ற மாறுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ் ஆப் பிரபலங்களைப்
பெரும்பாடு படுத்துகிறது அதிலும் திரைப்பிரபலங்களின் பாடு
திண்டாட்டம்தான்.பாலின மாற்றத்தில் தொடங்கி கிழப்பருவத் தோற்றம் வரை
அனைவரின் முகமும் கிண்டலுக்கு உட்படுகிறது.அபிமான கதாநாயகருக்குச் சகோதரி
இருந்தால் எப்படி இருக்கும்? பிரியமான கதாநாயகிக்குச் சகோதரன் இருந்தால்
எப்படி இருப்பான் என்பன போன்ற கற்பனைகளின் பிறப்பிடமாகவும் கலாய்த்தலின்
இருப்பிடமாகவும் இச்செயலி இருக்கிறது.கலாய்க்கப்படுதல் எனும் பெருங்கடலில்
சமுத்திரக்கனி சமுத்திரகாய்,பிஞ்சு,கட்டை என பல்வேறு பரிமானங்களில்
காட்சியளிக்கிறார். எதிரியாகப் பார்க்காமல் நண்பனாய்ப் பார்ப்பார் எனும்
இணையர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.
அஜித்குமாரையும் அழகுமங்கையாகக் காட்டுவதில் மகிழ்ந்திருக்கும் வேளையில் தாடிவைத்த தமன்னாக்களும் நரைத்தமுடி நயன்தாராக்களும் கலவரப்படுத்துகிறார்கள். சவப்பெட்டி நடனமாடக் காத்திருக்கும் சவுத் ஆஃப்ரிக்கர் நம்மைப்பார்த்து தில்வாலே புச்டே நேச்சா பாடும் துயர நிலைக்கு ஒப்பானதேயாகும்.
சின்ன வயசு போட்டோ ஒன்றுகூட இல்லை என ஏங்குபவர்களுக்கும்,அல்பாயுசு எனும் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் இந்நேரம் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என யூகிப்பவர்களுக்கும் இந்தச் செயலி ஒரு வரப்பிரசாதம்.அற்ப ஆயுளில் இறந்தவர்க்கு ஆல்ப ஆயுளைக் கொடுப்பது இதன் ஆகச்சிறந்த பெரும்பயன் என்பதை யாரும் மறுக்க இயலாது.
கருத்துகள்
கருத்துரையிடுக